பண்பறி ஆய்வு (Qualitative research) என்பது, சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள் ஆகிய துறைகள் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் துறைகளில் பயன்படுத்தப்படும் ஆய்வு முறைகளுள் ஒன்று. அதேவேளை, சந்தை ஆய்வு, வணிகம், இலாப நோக்கற்ற அமைப்புக்களின் சேவை விளக்கம் போன்ற கல்விசாராத சூழல்களிலும் இம்முறை பயன்படுவது உண்டு.
பண்பறி ஆய்வுகளின் நோக்கம் துறை சார்ந்த பின்னணிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, உளவியலாளர்கள் மனித நடத்தைகள் குறித்தும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் ஆழமாக அறிந்துகொள்ள விழைகின்றனர். பண்பறி ஆய்வு தீர்மானம் எடுத்தல் தொடர்பில் வெறுமனே என்ன, எங்கே, எப்போது, யார் போன்ற கேள்விகளுக்கு மட்டுமன்றி ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கும் விடைகாண முயல்கிறது. பண்பறி ஆய்வுகள் அரசறிவியல், சமூகப் பணி, சிறப்புக் கல்வி, கல்வி என்பன சார்ந்த ஆய்வாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.